இளமை ஊஞ்சல்.
எனது விடலைப் பருவமது. விளையாட்டுகளில் ஆர்வம் குறைந்து காதலெனும் காற்றால் தூக்கி பந்தாடப்பட்ட நேரம். ஆம் அறியாத வயது, புரியாத வயது, பருவமடைந்த பதினான்கு வயதிருக்கலாம் அப்போது.......
எனது எதிர் வீட்டில் முனுசாமி மாமா இருந்தார், அவரது தம்பி குடும்பம் திண்டிவனத்தில் இருந்தது. தம்பியின் மகள் தான் இச் சம்பவத்தின் கதாநாயகி. கதையின் நாயகனான என்னை காதல் வயப்படுதியவள். ஆம், அவள் விடுமுறையில் மட்டுமே பெரியப்பா வீடு வருவாள். அப்போதெல்லாம் என்னோடு விளையாடி எனக்கு மகிழ்ச்சி தருவாள். அவளோடு துள்ளி திரிந்த காலம் எனது விடலைப் பருவத்தின் பொற்காலமாக இருந்தது.
என் மனதை திருடிய கள்ளி, அவள் பெயரோ வள்ளி! வளையல்கள் நிறைந்த அவளின் கரங்கள் இசைப் பாடி என்னை எழுப்பும். அவள் குரல் மழலைக் குரல் போல இனிக்கும். அந்த பேசா மடந்தை பேச்சுக்காக ஏங்கியவன் நான். ஆம் அவள் மடந்தையே!
பெண்ணின் பருவங்கள் ஏழு. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண். இதில் அவளோ நான்காம் பருவம். பருவத்திற்கு மூன்று வருடம் என்றால், பன்னிரண்டு அல்லது பதிமூன்று வயது பெண். பூப்படைவதற்கு முந்தைய காலமது.
என்னோடு அவள் பழகிய போது பூப்படைந்திருக்கவில்லை. அவளுக்கு ஊஞ்சல் ஆட அதிக விருப்பம், பம்பு செட்டில் முழுவதுமாக நனைந்து விளையாட ஆசை. இதை இரண்டையும் நிறைவேற்றித்தான் அவள் மனதில் இடம் பிடித்தேன். ஆம் நான் பூவரசு மரத்தில் ஊஞ்சல் கட்டி காத்திருந்தேன் விடுமுறை நாட்களில்...........
வள்ளி வரப் போறா ...... துள்ளி வரப் போறா ........ என்ற பாடல் வரிகளைத்தான் மனதோடு சேர்ந்து உதடுகளும் உச்சரிக்கும். அவளோடு சுற்றித்திரிந்த வயல் வெளிகள், வாய்க்கால்கள் இன்றும் அவள் பெயரை பாடிக் கொண்டிருக்கின்றன. அவள் என் வாழ்வில் வசந்தமாக வருவது இளவேனில் காலத்தில் தான்.
இந்த விடுமுறை இப்படியாக செல்ல, அடுத்த ஆண்டும் வந்தது, விடுமுறையும் வந்தது. அவளுக்காக பூவரசு மரத்தில் ஊஞ்சல் கட்டி காத்திருந்தேன். வள்ளி வந்திருந்தாள், கூடவே வயதுக்கும் வந்திருந்தாள். பாவாடை தாவணியில் பளிச்செனத் தெரிந்தாள். பூவரசு மரத்தில் ஊஞ்சலைக் கண்டவள், என் வீட்டின் மீது கண்களைச் சுழற்றினாள்.. திண்ணையில் நானும் என் தங்கையும் அமர்ந்திருக்க, என்னோடு பேச வெட்கப்பட்டு என் தங்கையை அழைத்தால் விளையாட......
அவள் விளையாட என்னையும் அழைப்பாள் என ஏங்க, அது நடக்காமலேயே போனது, என்னோடு பேச தயங்கிய அவள், எனது தங்கையிடம் எனது நலன் விசாரித்தாள். நான் கட்டிய ஊஞ்சலில் ஆடியவள் இன்று இளமையின் ஊஞ்சலில் ஆடுகிறாள் என தெரிந்து கொண்டேன். அந்த விடுமுறைக்கு கண்களால் பேசிச் சென்றவள் தான், இப்போது கல்யாணம் முடித்திருந்தாள். அவளுக்காக நான் கட்டிய ஊஞ்சல் மனதில் இன்றும் ஆடத் தான் செய்கிறது.
நட்புடன்,
கவிகஜா. அழகிய நிலாக்காலம் தொடரும்.